மன அழுத்தத்தால் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட காவலர்... திருச்சியில் சோகம்
கனத்த இதயத்துடன் கண்ணீர் கடிதம் எழுதி வைத்துவிட்டு காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திருச்சி மாவட்டம் காவல்துறையில் மோப்பநாய் பிரிவு பயிற்சியாளர் மற்றும் காப்பாளராக பணியாற்றி வந்தவர் அழகர். திருச்சி மத்திய சிறைச்சாலை எதிரில் உள்ள காவலர் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துள்ளார்.
இறப்பதற்கு முன் இவர் எழுதிய கடிதத்தில், தன்னுடைய தற்கொலைக்கு காவல்துறை அதிகாரிகளோ, குடும்பத்தினரோ நண்பர்களோ யாரும் காரணம் இல்லை. கடந்த சில நாட்களாகவே காரணம் தெரியாத மன அழுத்தத்தில் தான் இருந்து வந்ததாகவும், அந்த மன அழுத்தத்தின் காரணமாகவே நன்றாக யோசித்து சுயமாக இந்த முடிவை எடுத்ததாகவும் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். மேலும் தான் இறந்த பிறகு தன் இறப்பு குறித்து நண்பர்களிடமோ, அதிகாரிகளிடமும், உறவினர்களிடமோ புலன் விசாரணை நடத்த வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
அம்மா, அப்பா, சகோதரன் சகோதரி சகோதரியின் குழந்தைகளின் பெயர்களை எழுதி மிஸ் யூ என குறிப்பிட்டுள்ளார். மேலும் சகோதரியின் கணவர் தன்னுடைய குடும்பத்தின் மூத்த மகனாக இருந்து கவனித்துக் கொள்ளுமாறும் கடிதத்தில் எழுதியுள்ளார். கடிதத்தின் இறுதியில் நினைவூட்டல் என குறிப்பிட்டு தன்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என எழுதி வைத்துவிட்டு தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மன அழுத்தம் காரணமாக காவலர்கள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாகி வரும் நிலையில், மன அழுத்தத்தின் காரணமாக பல நாட்கள் யோசித்து தற்கொலை முடிவை சுயமாக எடுத்துள்ளதாக கூறியுள்ள காவலரின் செயல் வேதனையின் உச்சமாகவே பார்க்கப்படுகிறது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060