பெரும்பான்மை எம்எல்ஏக்கள் பலம் அரசுக்கு உள்ளது: முதலமைச்சர் பழனிசாமி
தமிழகத்தில் அரசுக்கு தேவையான பெரும்பான்மை இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றூண்டு விழாவில் பங்கேற்க சென்றபோது கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, "அதிமுக-வில் 134 எம்எல்ஏ-க்கள் இருக்கிறார்கள். பேரவைத் தலைவர் ஒருவர் இருக்கிறார். எனவே மொத்தமாக 135 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். ஆகவே பெரும்பான்மை பலத்தோடு அதிமுக ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது. நேற்றைய அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு வந்தவர்கள் 109 பேர். பல்வேறு காரணத்திற்காக சிலர் வரவில்லை.
பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவு அரசுக்கு உள்ளது. நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என்று மத்திய அரசிற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தோம். இறுதிவரை போராடினோம். உச்சநீதிமன்றத்திலே சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் தமிழகம் செயல்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது" என்றார்.
டிடிவி தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் 19 பேர், முதல்வருக்கான ஆதரவை திரும்பப் பெறுவதாக ஆளுநரிடம் மனு அளித்துள்ள நிலையிலும், அரசு பெரும்பான்மையுடன் இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.

