அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் மீது வழக்குப்பதிவு
மதுரையில் தபால் வாக்குப்பதிவு செய்யும் இடத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மக்களவைத் தேர்தலையொட்டி காவல்துறையினருக்கான தபால் வாக்குப் பதிவு மதுரை மீனாட்சி மகளிர் கல்லூரி நேற்று நடைபெற்றது. அதனை மதுரை அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை பார்வையிட்டார். இதனைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தபால் வாக்கு பதிவு நடைபெற்று கொண்டிருக்கும் இடத்தில் அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் நேரில் வந்து வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்தது, தேர்தல் விதிமுறை மீறல் எனக் கூறினார்.மேலும் இதுகுறித்து தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்தி வேட்பாளர் ராஜ்சத்யன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டேவிட் அண்ணாதுரை கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் மதுரையில் தபால் வாக்குப்பதிவின்போது, தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்கு சேகரித்ததாக அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படை அதிகாரி தங்க மீனா அளித்த புகாரின் பேரில், ராஜ்சத்யன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.