முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை அவதூறாக பேசியதாக, திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக தலைமையில் அதிமுக அரசை கண்டித்து பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், கடந்த செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் திமுக கொள்கை பரப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா பங்கேற்று பேசினார். அப்போது அவர் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை அவதூறாக பேசியதாக, வழக்கறிஞர் துரை பெரியசாமி என்பவர் பெரம்பலூர் நகர காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக நெடுஞ்சாலை ஒப்பந்த புகார் தொடர்பாக சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவியை ராஜினாமா செய்துவிட்டு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என ஆ.ராசா கூறியது குறிப்பிடத்தக்கது.