மெடிக்கல் உரிமையாளரை மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடி சிலம்பரசன் விசிகவை சேர்ந்தவர் இல்லை என்று அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னிரசு விளக்கம் அளித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த மன்னிவாக்கம் பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிற வினோத் என்பவரை சிலம்பரசன் என்ற ரவுடி மாமூல் கேட்டு மிரட்டியதாகச் சொல்லப்பட்டது. இது தொடர்பாக ஆடியோ ஒன்றும் வெளியானது. இதையடுத்து ஓட்டேரி காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன், கூடுவாஞ்சேரி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், ஓட்டேரி காவல் ஆய்வாளர் பாலாஜி ஆகியோரது தலைமையில் 3 தனிபடைகள் அமைக்கப்பட்டு சிலம்பரசன் தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் தப்பிச் செல்ல முயன்ற சிலம்பரசனை தாம்பரம் அருகே காவல்துறையினர் கைது செய்தனர். மாமூல் கேட்டு மிரட்டியதாக கைது செய்யப்பட்ட சிலம்பரசன் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர் என்று செய்திகள் வெளியாகி இருந்தது.
இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கைது செய்யப்பட்ட சிலம்பரசன் விசிக கட்சியைச் சேர்ந்தவர் இல்லை என விசிக கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னிரசு கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விளக்கப்பதிவில் “ நேற்று இரவிலிருந்து கடைக்காரர் ஒருவரை விசிக கட்சியைச் சேர்ந்த ஒருவர் பணம் கேட்டு மிரட்டுவது போன்ற ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வந்தது. ஆனால் அந்த ஆடியோவில் விசிக தொடர்பாக எந்தப் பதிவும் இல்லை. அப்படியிருந்தும் மிரட்டிய நபர் விசிக கட்சியைச் சேர்ந்தவர் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கிறது.
இது குறித்து சம்பந்தப்பட்ட காவலதிகாரியிடம் கேட்ட போதும் கூட கைது செய்யப்பட்ட நபர் விசிக கட்சியைச் சேர்ந்தவர் இல்லை என்றும் அவர் ஒரு ரவுடி என்று விளக்கம் அளித்துள்ளார். ஆகவே இந்தச் செய்தியை யாரும் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.