தமிழக அரசின் முடிவில் ஏதோ மர்மம் இருக்கிறது- ஸ்டாலின்

தமிழக அரசின் முடிவில் ஏதோ மர்மம் இருக்கிறது- ஸ்டாலின்

தமிழக அரசின் முடிவில் ஏதோ மர்மம் இருக்கிறது- ஸ்டாலின்
Published on

சிலை திருட்டு வழக்குகளை சிபிஐயிடம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவெடுத்திருப்பதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிலை திருட்டு வழக்குகளின் விசாரணையை ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் நேர்மையாக நடத்திக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் நியமனம் உள்ளிட்ட 20 நிபந்தனைகளை கடந்த ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்திருந்ததை ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். உயர் நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் நடைபெற்று வரும் ஒரு விசாரணையில் அரசு திடீரென சிபிஐ விசாரணை தொடர்பான முடிவெடுத்திருப்பது உள்நோக்கம் நிறைந்தது என அவர் விமர்சித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவை சிலை திருட்டு தடுப்புப் பிரிவு கைது செய்துள்ள நிலையில் ஐ.ஜி. மீதே நம்பிக்கையில்லை என தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதில் ஏதோ மர்மம் இருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எனவே, சிலை திருட்டு வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றும் முடிவைக் கைவிட்டு, உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கண்காணிப்பில் செயல்படும் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை அரசு வழங்க வலியுறுத்துவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com