1800 அதிகாரிகள் சோதனை செய்யும் அளவுக்கு ஒரு குடும்பத்திடம் சொத்தா? என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயா டிவி அலுவலகம் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிகாலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரி சோதனை குறித்து தமிழிசை கூறுகையில், “சோதனையால் ஏன் இவ்வளவு பதற்றப்படுகிறார்கள், விமர்சிக்கிறார்கள்.?. நேர்மையாக இருந்தால் கணக்கு காட்டிவிட்டுப் போவதுதானே? ஏன் பதற்றப்பட வேண்டும்.? தமிழகத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகமிருக்கிறது என்பதே தலைகுனிவுதான். வருமான வரித்துறையை வைத்துக்கொண்டு அரசியல் நடத்த வேண்டிய அவசியமில்லை. இவர்களை ஒரு கட்சியாகவே நாங்கள் நினைக்கவில்லை. அது வெறும் ஒரு பிரிவுதான்” என்றார்.
மேலும், “வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் மட்டுமே சோதனை நடக்கிறது. இயல்பான நிர்வாக ரீதியான நடவடிக்கையைக்கூட அரசியலாக்குகிறார்கள். பாஜக நேர்மறையான நடவடிக்கையோடு தமிழகத்தில் காலூன்றுகிறது. சேகர் ரெட்டி முதல் விஜயபாஸ்கர் வரை பல்வேறு தரப்பினர் வீடுகள் மற்றும் அலுவலங்களில் சோதனைகள் நடைபெற்றுள்ளன. முறைகேடு இருந்தாலும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கூறுகிறார்கள். ரெய்டு நடத்துவது மட்டுமே கண்களுக்குத் தெரியும், அதன்பின் இருக்கும் பணி தெரியாது. நிர்வாக ரீதியாக துறை எடுக்கும் நடவடிக்கைகள் மக்களுக்குத் தெரிவதில்லை. இந்த ஓராண்டாக கருப்புப் பண ஒழிப்பில் மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்கிறது. ஓராண்டாகத்தான் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு சோதனைகள் தீவிரமாகியுள்ளன. தீவிரவாதத்தை ஒழிக்க சர்ஜிக்கல் ஸ்டிரைக், கருப்பு பணத்தை ஒழிக்க வருமானவரி சோதனை என்ற அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.