தன்னம்பிக்கையே கருணாநிதியின் நலத்திற்கு காரணம்: எஸ்.வி.சேகர் பேட்டி
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை திருநாவுக்கரசர், எஸ்.வி.சேகர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
கடந்த ஆண்டு முதல் உடல்நலம் பாதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார். உடல்நிலையை கருத்தில் கொண்டு முரசொலி பவள விழாவிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. அவரது உடல்நலம் தேறி வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முரசொலி அலுவலகத்திற்கு சென்றார். இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடியும் சென்னை கோபாலபுர இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார். தொடர்ந்து தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் கருணாநிதியை சந்தித்து பேசிவருகின்றனர்.
அந்த வகையில் கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று சந்தித்து பேசினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், "முன்பு இருந்ததைவிட கருணாநிதி நலமுடன் இருக்கிறார். தற்போது என்னை பார்த்த உடனேயே அடையாளம் கண்டுகொண்டார். நன்றாக சிரித்தார். கை கொடுத்தார். பேச முயற்சித்தார். ஆனால் முடியவில்லை" என்றார்.
இதேபோன்று, பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகரும் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.வி.சேகர், "முன்பை விட அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. சிரிக்கிறார். எளிதாக அடையாளம் கண்டுகொள்கிறார். இவர் இவ்வாறு நலமாக இருக்க காரணம் அவரின் ‘வில் பவர்’தான் காரணம். கூடிய விரைவில் இயல்பான நிலைக்கு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.