
கடைசி நிமிடத்தில் திருமணத்தை நிறுத்திய இளம்பெண், மணமகன் மீது பல்வேறு புகார்கள் உள்ளதாக விளக்கமளித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் மட்டகண்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த்துக்கும், தூனேரியைச் சேர்ந்த பிரியதர்ஷினிக்கும் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மணமக்கள் மணக்கோலத்தில் மேடையில் வீற்றிருந்தனர். படுகர் இன மரபுப்படி, மணமேடையில் மணப்பெண் 3 முறை சம்மதம் தெரிவித்த பின்பே தாலிகட்ட வேண்டும்.
அதன்படி சம்மதம் கேட்டபோது மௌனம் காத்த பிரியதர்ஷினி, மூன்றாவது முறை கேட்கையில் சம்மதமில்லை என்று கூறி, ஆனந்தின் கைகளை தடுத்தார். தான் விரும்பும் ஒருவர், ஒரு மணி நேரத்தில் வந்து விடுவார் என்று கூறியவாறே, எழுந்து அங்கிருந்து செல்ல முற்பட்டார். இதை மறுத்து தடுத்த பிரியதர்ஷினியின் உறவினர்கள், அவரை தாக்க முற்பட்டனர். இவை ஒருபுறம் நடக்க மாப்பிள்ளைக் கோலத்திலிருந்த ஆனந்தோ, செய்வதறியாமல் சங்கடத்தில் தவித்தார்.
இந்நிலையில் மணப்பெண்ணை அவரது பெற்றோர் வீட்டில் இருந்து வெளியேற்றியதாகவும், அவர் காதலனை தேடி சென்னை வந்தததாகவும் தகவல் பரவியது. இந்நிலையில், தான் எங்கும் செல்லவில்லை, தனது பெற்றோருடன் தான் இருப்பதாக அப்பெண் விளக்கம் அளித்து ஆடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், தனக்கு நிச்சயிக்கப்பட்ட இளைஞர் மீது பல்வேறு தவறான தகவல்கள் வந்ததாகவும் அதனாலேயே பொய் கூறி திருமணத்தை நிறுத்தியதாகவும் கூறியுள்ளார். மேலும் தான் பெற்றோருடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.