இது தமிழக அரசுக்கு அவமானம் - ஸ்டாலின் கருத்து

இது தமிழக அரசுக்கு அவமானம் - ஸ்டாலின் கருத்து

இது தமிழக அரசுக்கு அவமானம் - ஸ்டாலின் கருத்து
Published on

சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை செயல்பட அனுமதிக்கலாம் என்று அகர்வால் குழுவின் பரிந்துரை தமிழக அரசுக்கு ஏற்பட்டு இருக்கும் அவமானம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் தடியடி நடத்தி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனிடையே அந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுவை தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது.

பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்தும், பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடை கோரியும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. ஆனால், தமிழக அரசின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்தது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக இதனை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்தது. ஆய்வு மேற்கொண்ட அக்குழு சீல் இடப்பட்ட அறிக்கை ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. 

அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்களை உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் முடிவை நியாயப்படுத்த முடியாது. ஆலையை மூட உத்தரவிட்டது இயற்கை நியதிக்கு முரணானது. முறையாக நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும். சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை செயல்பட அனுமதிக்கலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை செயல்பட அனுமதிக்கலாம் என்று அகர்வால் குழுவின் பரிந்துரை தமிழக அரசுக்கு ஏற்பட்டு இருக்கும் அவமானம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதில் தமிழக அரசு மெத்தனம் காட்டுவதாகவும் நீதிபதி தருண் அகர்வால்  பரிந்துரைக்கு தமிழக அரசின் மெத்தனம்தான் காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இப்படி நடக்கும் என்பதால் தான், அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன் எனவும் இனியாவது, தமிழக அரசு முறையான சட்டப் போராட்டத்தை நடத்த வேண்டும் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com