விசைத்தறி, கைத்தறி, ஜவுளி தொழில்களுக்கான ஜிஎஸ்டியை குறைத்து சிறு, குறு தொழில்களை காப்பாற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊழல் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு நேர்மையாக தொழில் புரிபவர்கள் ஜிஎஸ்டியால் கவலைப்படத் தேவையில்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறுவது வியப்பளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விசைத்தறி, ஜவுளி தொழில்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்ய ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஊழலில் இருந்து தப்பிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், நிதியமைச்சர் ஜெயக்குமாரும் மாநிலத்தின் உரிமைகளை அடகு வைப்பதாகவும் விமர்சித்துள்ளார். ஜிஎஸ்டியை குறைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.