நான்கு நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வரும் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்தித்து பேசவுள்ளார்.
இதற்காக இலங்கையில் இருந்து புறப்படும் அவர் முதலில் பெங்களுரு செல்கிறார். பின்பு அங்கு நடைபெறும் சர்வதேச இணையவெளி மாநாட்டில் பங்கேற்ற பின்னர், ரணில் டெல்லி செல்வதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இந்த பயணத்தின்போது ரணில் விக்கிரமசிங்க, இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில் தமிழக மீனவர்கள் இலங்கை படையினரால் தாக்கப்படும் விவகாரம் தொடர்பாக இரு நாட்டுத் தலைவர்களும் விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கடற்பகுதியில் இரு நாடுகளும் பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தவுள்ளனர். இலங்கை கடற்பகுதியில் சீனக் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சூழலில் மோடியை ரணில் சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.