“உச்சநீதிமன்றத்தடை கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏவுக்கும் பொருந்தும்” - பேரவைச் செயலகம்

“உச்சநீதிமன்றத்தடை கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏவுக்கும் பொருந்தும்” - பேரவைச் செயலகம்

“உச்சநீதிமன்றத்தடை கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏவுக்கும் பொருந்தும்” - பேரவைச் செயலகம்
Published on

உச்சநீதிமன்றம் விதித்த இடைக்காலத்தடை கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவுக்கும் பொருந்தும் என பேரவை செயலகம் தெரிவித்துள்ளது. 

அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவரின் மீது சபாநாயகரிடம், கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் எம்எல்ஏக்கள் 3 பேரும் 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கக் கோரி, சபாநாயகர் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதற்கிடையே, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர, பேரவை செயலாளரிடம் திமுக மனு அளித்தது. 

இதைத்தொடர்ந்து சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன். தடை கோரி நீதிமன்றம் செல்ல விருப்பமில்லை எனவும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு தெரிவித்திருந்தார். 

இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் தொடரபட்ட வழக்கு விசாரணைக்கு வந்தபோது சபாநாயகர் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்த தடை வழக்கு தொடராத பிரபுவுக்கும் பொருந்துமா என கேள்வி எழுந்தது. இதைத்தொடர்ந்து இன்றுடன் சபாநாயகர் அளித்த கால அவகாசம் முடிவடைவதால் சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க ஒருவார காலம் கூடுதல் அவகாசம் கோரி கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு பேரவை செயலாளர் சீனிவாசனிடம் மனு அளித்திருந்தார். 

இந்நிலையில், உச்சநீதிமன்றம் விதித்த இடைக்காலத்தடை கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவுக்கும் பொருந்தும் எனவும் அதனால் அவர் விளக்கம் அளிக்க தேவையில்லை எனவும் பேரவை செயலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com