தொகுதிகள் ஒதுக்கீடு: பாஜக, பாமக, அதிமுக விடிய விடிய பேச்சுவார்த்தை!

தொகுதிகள் ஒதுக்கீடு: பாஜக, பாமக, அதிமுக விடிய விடிய பேச்சுவார்த்தை!
தொகுதிகள் ஒதுக்கீடு: பாஜக, பாமக, அதிமுக விடிய விடிய பேச்சுவார்த்தை!

பாரதிய ஜனதா, பாமக ஆகிய கட்சிகள், பேரவைத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்வது குறித்து அதிமுக தலைமையுடன் விடிய விடிய பேச்சுவார்த்தை நடத்தின. தொகுதிகள் பட்டியல் இன்று வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா 20 இடங்களிலும் பாமக 23 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவு செய்ய, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருடன் நேற்றிரவு பாரதிய ஜனதா முதலில் பேச்சுவார்த்தை நடத்தியது.

சென்னை - ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கிஷன் ரெட்டி, எல்.முருகன், அண்ணாமலை, கேசவ விநாயகம் ஆகியோர் பங்கேற்றனர். அதிமுக தரப்பில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரும் இருந்தனர். 2 மணி நேரத்துக்கும் மேல் நடந்த பேச்சுவார்த்தையில், சுமுக உடன்பாடு எட்டப்பட்டதாகவும், பாஜக போட்டியிடும் தொகுதிகள் உறுதியாகி விட்டதாகவும் எல்.முருகன் கூறினார்.

பின்னர், பாமக சார்பில் பேச்சுவார்த்தை நடந்தது. அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர், ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆகியோருடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி. சண்முகம், கே.பி. அன்பழகன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். நள்ளிரவில் சுமார் 2 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில், பாமக கேட்ட தொகுதிகள் கிடைத்திருப்பதாக, பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி தெரிவித்தார்.

இதன் பின்னர், ஓபிஎஸ் - ஈபிஎஸ், கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், தங்கமணி, வேலுமணி ஆகியோர், அதிமுக சார்பில் களமிறங்கவுள்ள வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தினர். நேற்றிரவு 9:20 மணியளவில் தொடங்கிய தொகுதிகள் ஒதுக்கீடு பேச்சுவார்த்தைகள், மற்றும் வேட்பாளர்கள் தேர்வு குறித்த ஆலோசனை விடிய விடிய நீடித்தன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com