அமமுகவின் 59 வேட்பாளர்களுக்கும் ஒரே பொதுச் சின்னம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

அமமுகவின் 59 வேட்பாளர்களுக்கும் ஒரே பொதுச் சின்னம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு
அமமுகவின் 59 வேட்பாளர்களுக்கும் ஒரே பொதுச் சின்னம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

அமமுகவின் 59 வேட்பாளர்களையும் சுயேச்சைகளாக கருதி ஒரே பொதுச்சின்னம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல், தமிழக இடைத்தேர்தலுக்கு குக்கர் சின்னத்தை பொது சின்னமாக ஒதுக்கக்கோரி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடைகால மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இதுவரை பதிவு செய்யப்படாததால் சுயேச்சையாகவே கருதுவதாகவும் இதனால், பொதுச்சின்னம் கொடுக்க முடியாது என்றும், தனித்தனி சின்னம்தான் ஒதுக்க முடியும் என்றும் தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான பிரமாண பத்திரத்தையும் தேர்தல் அணையம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்த நிலையில் அமமுகவுக்கு பொதுவான சின்னம் ஒதுக்குப்படுமா..? என்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று இறுதி விசாரணை தொடங்கி நடைபெற்றது. அப்போது, அமமுகவுக்கு முதலில் குக்கர் சின்னத்தை கொடுத்தது யார்? என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தேர்தல் அதிகாரி குக்கர் சின்னத்தை அளித்தார் என டிடிவி தினகரன் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் தெரிவித்தார். இரட்டை இலை பற்றி மூலவழக்கு நிலுவையில் இருந்தபோது டெல்லி உயர்நீதிமன்றம் குக்கர் சின்னம் ஒதுக்கியது போன்று உச்சநீதிமன்றமும் இடைக்காலமாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என டிடிவி தினகரன் தரப்பில் வாதிடப்பட்டது.

பதிவு செய்யப்படாத கட்சிக்கு இடைக்காலமாக குக்கர் சின்னம் வழங்கியது பிரதிநிதித்துவ சட்டப்படி முரணானது; பதிவு செய்யப்படாத கட்சிக்கு எப்படி பொதுச்சின்னத்தை ஒதுக்க முடியும்? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். இதனையடுத்து, இன்றைக்கே அமமுகவை கட்சியாக பதிவு செய்கிறோம்; குக்கர் இல்லை என்றால் வேறு ஒரு பொதுச்சின்னம் தரவேண்டும் என டிடிவி தினகரன் தரப்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து அமமுகவை இன்றே பதிவு செய்தாலும் குக்கர் அல்லது பொதுசின்னத்தை உடனே தர முடியாது என தேர்தல் ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்திடம் தெரிவிக்கப்பட்டது.  இதனையடுத்து டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உச்சநீதிமன்றமும் மறுப்பு தெரிவித்துவிட்டது.

அதேசமயம், ஒருவர் எவ்வளவு வலுவுள்ளவராக இருந்தாலும் சின்னம்தான் அவரது அடையாளம் என தெரிவித்த நீதிபதிகள், ஒரே குழுவில் உள்ளோருக்கு வெவ்வேறு சின்னத்தை வழங்கினால் அவர்களது அரசியல்வாழ்வு கேள்விக்குறியாகிவிடும் என தெரிவித்தனர். அப்போது, குக்கரை போன்று பொதுவான சின்னத்தை அமமுக வேட்பாளர்களுக்கு ஒதுக்க ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அமமுகவின் 59 வேட்பாளர்களையும் சுயேச்சையாக கருதி ஒரே பொதுச்சின்னத்தை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர், தேர்தல் களம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டி பொதுச் சின்னத்தை ஒதுக்க நீதிபதிகள் உத்தரவிட்டதாக கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com