நீண்ட கால நண்பரை நலம் விசாரித்தேன் - சரத்குமார்
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் இல்லத்துக்குச் சென்ற சரத்குமாரை, தேமுதிகவின் எல்கே சுதீஷ் வரவேற்றார். அங்கு விஜயகாந்த்தை, சரத்குமாரும், சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகிகளும் சந்தித்துப் பேசினர். அப்போது எல்.கே.சுதீசும் உடன் இருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பியிருக்கும் தனது நண்பரை சந்தித்து நலம் விசாரித்ததாகக் கூறினார். மேலும், தற்போதைய அரசியல் சூழல் குறித்து இருவரும் பேசிக் கொண்டதாகவும் சரத்குமார் தெரிவித்தார். மக்களவை கூட்டணி தொடர்பாக அதிமுக- தேமுதிக இடையே இழுபறி நீடித்து வருகிறது. அரசியல் பரபரப்பு காணப்படும் இந்நேரத்தில் விஜயகாந்த், சரத்குமார் சந்தித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

