ராஜ்யசபா பதவியை ராஜினாமா செய்த சமாஜ்வாதி எம்.பி - பாஜகவில் சேர திட்டமா?
சமாஜ்வாதி எம்.பி நீரஜ் சேகர் தன்னுடைய மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நீரஜ் குமார் முன்னாள் பிரதமர் சந்திர சேகரின் மகன். தந்தையின் மறைவை அடுத்து 2007 ஆம் ஆண்டு பல்லியா தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் நீரஜ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேபோல், 2009 ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் அதே தொகுதியில் மீண்டும் எம்.பி ஆக தேர்வு செய்யப்பட்டார். தற்போது அவர் சமாஜ்வாதி சார்பில் மாநிலங்களவை எம்.பி ஆக இருந்து வந்தார்.
இந்நிலையில், நீரஜ் சேகர் தன்னுடைய மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்துள்ளார். மக்களவை தேர்தலில் மீண்டும் போட்டியிட அகிலேஷ் யாதவ் வாய்ப்பு அளிக்காததே ராஜினாமாவிற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதேபோல், நீரர் சேகர் பாஜகவில் இணையவுள்ளதாகவும், அக்கட்சியில் இருந்து மாநிலங்களவை எம்.பி ஆக தேர்வு செய்யப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.