“2 ஆயிரம் ரூபாய் அறிவிப்பு தேர்தலுக்காக அல்ல” - முதல்வர் பழனிசாமி

“2 ஆயிரம் ரூபாய் அறிவிப்பு தேர்தலுக்காக அல்ல” - முதல்வர் பழனிசாமி
“2 ஆயிரம் ரூபாய் அறிவிப்பு தேர்தலுக்காக அல்ல” - முதல்வர் பழனிசாமி

ஏழைகளுக்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்தது குறித்து சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

பட்ஜெட் மீதான விவாதத்தின்போது பேசிய திமுக உறுப்பினர் பொன்முடி, ‌தேர்தலைக் கருத்தில் கொண்டு வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் கொடுக்கப்படுவதாகக் கூறினார். அதற்குப் பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஏழைகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு தேர்தலுக்காக அல்ல என்றார்.

இதனிடையே, நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தது நிழல் பட்ஜெட் என்றும், 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்தது நிஜ பட்ஜெட் என்றும் பொன்முடி விமர்சித்தார். அப்போது எழுந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், நான் நிஜ பட்ஜெட்டைதான் தாக்கல் செய்தேன் என்று கூறினார். நிஜ பட்ஜெட்டை தாக்கல் செய்ததால்தான் அதிமுக ஆளும் கட்சி வரிசையில் இருப்பதாகவும், நிழல் பட்ஜெட்டை தாக்கல் செய்ததால் திமுக எதிர்க்கட்சி வரிசையில் இருப்பதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

2 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்ற அறிவிப்பை பட்ஜெட்டில் அறிவித்திருக்கலாமே என பொன்முடி மீண்டும் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேர்தலுக்கான இந்த அறிவிப்பை வெளியிடவில்லை என்றும், தொழிலாளர்கள் மற்றும் ஏழை குடும்பங்களின் மீது அக்கறை கொண்டே இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்த அறிவிப்பு சிறந்ததா? இல்லையா? என்பதை மட்டும் கூறுங்கள் என முதல்வர் கேட்டதற்கு, அறிவிப்பை எதிர்க்கவில்லை என்றும், 110ல் விதியின் கீழ் அறிவிக்காமல் பட்ஜெட்டில் அறிவித்திருக்கலாம் என்றும் பொன்முடி தெரிவித்தார். 110 விதியின் கீழ் எந்த அறிவிப்பையும் வெளியிட முதலமைச்சருக்கு உரிமை உள்ளது என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். இவ்வாறு அவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com