திருப்பூரில் சாலையில் கண்டெடுத்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை போலீசாரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
திருப்பூர் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் செல்வம் (50). இவர் காதர்பேட்டையில் செகண்ட்ஸ் பனியன் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை தனது நண்பர் ராஜமாணிக்கம் என்பவருடன், நஞ்சப்பா பள்ளி சாலையில் நடந்து சென்றார்.
அப்போது, ரோட்டில் கிடந்த பேக் ஒன்றை கண்டெடுத்தார். அதில் ஒரு லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் இருந்தது. உடனே இருவரும் திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைந்து சென்று இன்ஸ்பெக்டர் கணேசனிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் விசாரித்து வந்தனர்.
அப்போது, ரூ.1.50 லட்சம் ரூபாய் தவறியதாக போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க கருவம்பாளையத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவர் சென்றார். அவரிடம் விசாரித்த போது ராக்கியபாளையத்தில் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும், வசூல் செய்த பணத்துடன், நூல் வாங்குவதுக்காக ஆலாங்காட்டில் இருந்து காலேஜ் ரோட்டுக்கு டூவீலரில் சென்ற போது பணம் தவறியதாக கூறினார்.
இதையடுத்து கண்டெடுக்கப்பட்ட பணம் விஜயகுமாருடையது என விசாரணையில் தெரியவந்தது. உடனே பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த இன்ஸ்பெக்டர் கணேசன், ஸ்டேஷனில் பணத்தை ஒப்படைத்தவரின் நேர்மையை பாராட்டி, சால்வை அணிவித்து கவுரவித்தார்.