நடப்பு ஐபிஎல் சீசனின் 19வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களை சென்னை அணி குவித்துள்ளது.
ஃபாப் டூப்ளசிஸ் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். இருவரும் 74 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். பத்தாவது ஓவரில் ருதுராஜ் 25 பந்துகளில் 33 ரன்கள் குவித்து சாஹல் சுழலில் விக்கெட்டை இழந்தார். மறுபக்கம் டூப்ளசிஸ் அரை சதம் கடந்தார்.
ரெய்னா 18 பந்துகளில் 24 ரன்களை குவித்து வெளியேறினார். அதில் மூன்று சிக்ஸர்கள் அடங்கும். டூப்ளசிஸ் 41 பந்துகளில் 50 ரன்களை குவித்து வெளியேறினார். இருவரும் ஹர்ஷல் பட்டேல் வீசிய 14வது ஓவரில் அடுத்தடுத்து அவுட்டாகி இருந்தனர்.
தொடர்ந்து கிரீசுக்கு வந்த ஜடேஜா மற்றும் ராயுடு பொறுப்புடன் ஆடினர். ஹர்ஷல் பட்டேல் வீசிய 18வது ஓவரில் ராயுடு 14 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதனால் கேப்டன் தோனி கிரீசுக்கு வந்தார்.
கடைசி ஓவரில் ஜடேஜா 5 சிக்ஸர் அடித்தார். அதுமட்டுமல்லாது ஒரு பவுண்டரியும் அவர் விளாசினார். மொத்தமாக அந்த ஓவரில் 37 ரன்களை ஜடேஜா குவித்தார். அதன் மூலம் அரை சதமும் கடந்திருந்தார் அவர். அந்த ஓவரை ஹர்ஷல் பட்டேல் வீசி இருந்தார்.
தொடர்ந்து பெங்களூர் அணி 192 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டி வருகிறது.