ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: திருநாவுக்கரசர்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிச.5 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். ஆர்.கே.நகர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவரது மறைவுக்கு பிறகு அந்த தொகுதி காலியாக உள்ளது என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. அதன்படி தேர்தல் ஆணையம் ஏப்ரல் 14ஆம் தேதி தேர்தலை நடத்த திட்டமிட்டு அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது. பின்னர் பணப்பட்டுவாடா புகாரின் காரணமாக ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் டெல்லியில் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் டிசம்பர் 21-ம் தேதி ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு காங்கிரஸ் ஆட்சி ஆதரவு அளிக்கும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.