ரத யாத்திரை விவகாரம்: பேரவையில் இருந்து திமுக வெளியேற்றம்

ரத யாத்திரை விவகாரம்: பேரவையில் இருந்து திமுக வெளியேற்றம்

ரத யாத்திரை விவகாரம்: பேரவையில் இருந்து திமுக வெளியேற்றம்
Published on

ரத யாத்திரை விவகாரம் தொடர்பாக தொடர் அமளியில் ஈடுபட்டதால் சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் வெளியேற்றப்பட்டனர். 

ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. திமுக செயல் தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இந்தக் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார். அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், “ரத யாத்திரையால் மதக்கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த ரத யாத்திரை ராமன் கோயில் கட்ட என சொல்லப்படுகிறது. ஆனால் அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. அயோத்தி வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில் ரத யாத்திரையை அனுமதித்தது ஏன்? மதசார்பற்ற தன்மைக்கும் நாட்டின் பன்மை தன்மைக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் தமிழக அரசு ரத யாத்திரைக்கு அனுமதி அளித்துள்ளது. தற்போது நடப்பது அதிமுக ஆட்சியா? பாஜக ஆட்சியா?” என கடுமையான பேசினார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “ ரத யாத்திரை திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து மதுரை ராமநாதபுரம், தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரி செல்கிறது. 5 மாநிலங்களில் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ரத யாத்திரை சென்றுள்ளது. இந்த யாத்திரையால் எந்தப் பாதிப்பும் இருக்கக்கூடாது என காவல்துறை பாதுகாப்பு வழங்கியுள்ளது. அனைத்து மதத்திற்கும் சம உரிமை உண்டு. தமிழகத்தில் இதனை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றனர்” என்றார்.

ரத யாத்திரை விவகாரத்தில் முதல்வரின் விளக்கத்தை ஏற்க மறுத்து திமுகவினர் பேரவையில் முழக்கமிட்டனர். அவையை நடத்த ஒத்துழைக்காவிட்டால் நடவடிக்கை எடுக்க நேரிடும் என சபாநாயகர் தனபால் எச்சரிக்கை விடுத்தார். இதற்கு மேல் அவையை நடத்த ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன் என்றார். அதையும் மீ்றி திமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால்  சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் வெளியேற்றப்பட்டனர்.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com