கள்ளச்சாராயம் விற்றவர்களை திருத்தி மறுவாழ்வு : ‘ரியல் ஹீரோ’ எஸ்.பி மயில்வாகனம்..!

கள்ளச்சாராயம் விற்றவர்களை திருத்தி மறுவாழ்வு : ‘ரியல் ஹீரோ’ எஸ்.பி மயில்வாகனம்..!
கள்ளச்சாராயம் விற்றவர்களை திருத்தி மறுவாழ்வு : ‘ரியல் ஹீரோ’ எஸ்.பி மயில்வாகனம்..!

ராணிப்பேட்டையில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களை திருத்தி அவர்களுக்கு கறவை மாடுகள் தந்து எஸ்.பி மயில்வாகனம் மறுவாழ்வு ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு அடுத்த நாராயணபுரம் மலைக்கிராம சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வெகுவான மக்கள் பல ஆண்டுகாலமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவது மற்றும் விற்பனையில் ஈடுபடுவது என வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் ராணிப்பேட்டைக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்ட மயில்வாகனம், கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களை அதிரடியாக கைது செய்தார்.

பின்னர் அவர்கள் வாழ வேறு வாழ்தாரம் இல்லை என்பதை புரிந்துகொண்ட அவர், சினிமாவில் வரும் கதாநாயகன் போல, அவர்களுக்கு வாழ்வாதாரத்திற்கு வழி ஏற்படுத்திக்கொடுத்துள்ளார். இவரால் நாராயணபுரம் மலைகிராமத்தில் 50க்கும் மேற்பட்ட கள்ளச்சாராய வியாபாரிகள் மனம்திருந்தி கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபடுவதில்லை என உறுதியளித்துள்ளனர்.

அவர்களின் வாழ்வாதாரத்திற்காக மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினியிடம் பேசி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பாக 2019 - 2020 கான மறுவாழ்வு நிதி உதவி திட்டத்தின் கீழ் கறவை மாடுகளை வாங்கி திருந்தியவர்களுக்கு கொடுத்தார். 50 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு ரூ.44 லட்சம் மதிப்பிலான கறவை பசு மாடுகள் மற்றும் கறவைப் பசுக்களுக்கு தேவையான கொட்டகைகளை அமைப்பதற்கான நிதி உதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் மூலம் வழங்கினார். இதனால் அப்பகுதி மக்கள் மயில்வாகனம் மீது மிகப்பெரும் மரியாதையையும், அன்பையும் வைத்துவிட்டனர்.

இதுமட்டுமின்றி ராணிப்பேட்டை மாவட்டம் வாழைப்பந்தல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பொன்னம்பலம் கிராமத்தில் கள் விற்பனை செய்துவந்த நபர்களை திருந்தினார். அத்துடன் அப்பகுதி இளைஞர்களுக்காக நூலகம் மற்றும் உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார். பொன்னம்பலம் கிராமத்தில் பல ஆண்டுகளாக பணங்கள், ஈச்சங்கள் தொழிலை, அப்பகுதி மக்கள் குல தொழிலாக செய்து வந்தனர். இவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்த மயில்வாகனம், பின்னர் அவர்களை திருத்தினார்.

மேலும் அவர் திறந்து வைத்த உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி கருவிகள் தேவைப்பட்டதால், தனது சொந்த செலவில் அவற்றை வாங்கிக்கொடுத்தார். இந்த ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளால் எஸ்.பி மயில்வாகனத்தை மலைக்கிராம மக்கள் தலையில் வைத்து கொண்டாடுகின்றனர். போலீஸ் உங்கள் நண்பன் என்ற வாசகத்தை மிஞ்சி, போலீஸ் உங்கள் வாழ்க்கையை மாற்றுபவர் என நிரூபித்துள்ளார் இந்த காவல்துறை அதிகாரி மயில்வாகனம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com