ரஜினிகாந்த் கோட்டையில் முதலமைச்சராக அமர்வார்: தமிழருவி மணியன் உறுதி
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பயணம் தொடங்கிவிட்டது எனவும், கோட்டையில் முதலமைச்சராக அவர் அமர்வார் என்றும் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
ரஜினியின் அரசியல் வருகைக்கு அடித்தளம் அமைப்பதற்காக காந்திய மக்கள் இயக்கம் சார்பில் மாபெரும் மக்கள் திரள் மாநாட்டை திருச்சியில் தமிழருவி மணியன் தலைமை தாங்கி நடத்தினார். இதில் பேசிய தமிழருவி மணியன், அரசியலுக்கு வருவது என்பது ஆண்டவன் இட்ட கட்டளை என ரஜினி தன்னிடம் தெரிவித்ததாக கூறினார். நிச்சயமாக அரசியலுக்கு தான் வருவது என்று முடிவெடுத்துவிட்டதாகவும் ரஜினி கூறியதாக தமிழருவி மணியன் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், “ரஜினிகாந்தின் அரசியல் பயணம் தொடங்கிவிட்டது. ஊழல் இல்லாத ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதே அவரின் கனவு. நதிகள் இணைப்பை 10 ஆண்டுகளில் செய்து முடிக்க முடியும் எனவும் ரஜினி கூறியுள்ளார். தமிழகத்தில் தற்போது ரஜினிக்கு 25 சதவிகித வாக்குகள் உள்ளன. நிச்சயம் அவர் தேர்தலில் வெற்றிபெற்று கோட்டையில் முதலமைச்சராக அமரும் நாள் வரும். ரஜினிகாந்தை தமிழகம் தவறவிட்டால் வாழ்வதற்கும் வழியில்லாமல் போகும்” என்று கூறினார்.
மேலும், “கடந்த 50 ஆண்டுகளாக ஊழல் செய்து இரு திராவிட கட்சிகளும் தமிழகத்தை சீரழித்துவிட்டன. தமிழகத்தில் தற்போதைய ஆட்சி முடிவதற்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது. ஆட்சி கலைந்து தேர்தல் வந்தால் அமைச்சர்களால் டெபாசிட் கூட வாங்க முடியாது. தமிழகத்தில் திறமையான ஐஏஸ் அதிகாரிகளை கொண்டு பொற்கால ஆட்சி வழங்க முடியும். கோடிகளை கொள்ளையடித்து சேகர் ரெட்டியிடம் கொடுத்தவர் தான் ஓபிஎஸ்" என தமிழருவி மணியன் தெரிவித்தார்.

