காமெடிக்கு மார்ஃபிங் செய்த ஐபிஎல் அணி- கடுப்பாகி அன்ஃபாலோ செய்த கேப்டனுக்கு அஸ்வின் ஆதரவு

காமெடிக்கு மார்ஃபிங் செய்த ஐபிஎல் அணி- கடுப்பாகி அன்ஃபாலோ செய்த கேப்டனுக்கு அஸ்வின் ஆதரவு
காமெடிக்கு மார்ஃபிங் செய்த ஐபிஎல் அணி- கடுப்பாகி அன்ஃபாலோ செய்த கேப்டனுக்கு அஸ்வின் ஆதரவு

நகைச்சுவை என்ற பெயரில் விளையாட்டாக ராஜஸ்தான் அணி பகிர்ந்த ட்வீட்டால், அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கோபத்தில், ராஜஸ்தான் அணியின் ட்விட்டர் பக்கத்தை அன்ஃபாலோ செய்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், இந்தியாவில் 2022-ம் ஆண்டுக்கான ஐபிஎல் 15-வது சீசன் டி20 போட்டி நடைபெறுகிறது. நாளை மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கும் இந்தப் போட்டி, மே மாதம் 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது. புதிதாக இந்த வருடம் 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதால், எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையடுத்து, ஒவ்வொரு அணியும், தங்களது சமூகவலைத்தளப் பக்கங்களில் ரசிகர்களை கவரும் வகையில், நாளுக்கொரு புது அப்டேட்டுகளை கடுத்து வருகின்றன. சிலநேரங்களில், ரசிகர்களை ஈர்ப்பதற்காக ஐபிஎல் அணிகள், வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ளவும் செய்கின்றன. அந்த வகையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் செயலால், அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கடுப்பாகியுள்ளார்.

இந்த வருடம் நடைபெற்ற மெகா ஏலத்தில், மற்ற அணிகளைவிட திறமையான வீரர்களை வாங்கி மிகச் சிறந்த அணியை கட்டமைத்துவிட்டது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி என்ற அளவுக்கு பேசப்பட்டது. ஏனெனில், சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால் ஆகியோரை தக்கவைத்த நிலையில், தேவ்தத் படிக்கல், ஹெட்மேயர், ரியான் பராக், போல்ட், கூல்டர் நைல், அஸ்வின், சாஹல் என பல வீரர்கள் இந்த அணியால் எடுக்கப்பட்டனர்.

ஐபிஎல் போட்டிகள் நாளை துவங்க உள்ளநிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன், தலையில் டர்பன் அணிந்திருப்பது போன்று மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்ட அந்த அணி நிர்வாகம், ‘இதில் நீங்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளீர்கள் (You’re looking gorgeous)’ என பதிவிட்டிருந்தது. இதனால் கோபமடைந்த கேப்டன் சஞ்சு சாம்சன், “நண்பர்கள் வேண்டுமானால் இதுபோன்று செய்வதை ஏற்றுகொள்ளலாம். ஆனால் அணிகள் தொழில்முறையாக (பொறுப்புடன்) நடந்துகொள்ள வேண்டும்” என பதிலுக்கு ட்விட்டர் பக்கத்தின் மூலமே பதிலடி கொடுத்திருந்தார்.

சஞ்சு சாம்சன், ராஜஸ்தான் அணியின் ட்விட்டர் பக்கத்தையே அன்ஃபாலோ செய்துள்ளார். இதையடுத்து ராஜஸ்தான் அணி தான் பதிவிட்ட ட்வீட்டை உடனடியாக டெலிட் செய்தது. மேலும், அந்த அணியின் வீரராக களமிறங்கவுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக ‘மாற்றவும்’ என்று ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார். இதனால் அணியில் ஏதேனும் குழப்பமா என்று ரசிகர்கள் நினைத்தநிலையில், அந்த அணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ''அணியில் எந்த குழப்பமும் இல்லை. சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டிக்கு, அணி வீரர்கள் தயாராகி வருகிறார்கள். விரைவில், டிஜிட்டல் நிர்வாகத்திற்கான குழுவை மறுபரிசீலனை செய்து, சரியான நேரத்தில் புதிய நிர்வாக குழு நியமிக்கப்படும். ரசிகர்கள் தினமும் அப்டேட் கேட்பதாலேயே இதுபோன்ற வித்தியாசமாக செய்ய முயற்சித்தோம். விரைவில் இதற்கு தீர்வு காண்போம்” என்று குறிப்பிட்டுள்ளது. இதேபோல் சில தினங்களுக்கு முன்னதாக யுவேந்திர சாஹல் தான் கேப்டன் என்று பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com