ஊஞ்சலில் அமர்ந்து பேசுபவன் நானல்ல: ராகுல் காட்டம்
எல்லையில் ஆயிரம் சீன வீரர்கள் அத்துமீறி இந்தியாவுக்குள் நுழைந்த நிலையில், அந்நாட்டு அதிபரோடு ஊஞ்சலில் அமர்ந்து பேசுபவன் நானல்ல என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
சீனா, மற்றும் பூட்டான் நாடுகளின் தூதர்களை சந்தித்ததாக எழுந்த சர்ச்சைக்குப் பதிலளிக்கும் விதத்தில் ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள ராகுல்காந்தி, எல்லையில் ஆயிரம் சீன வீரர்கள் அத்துமீறி இந்தியாவுக்குள் நுழைந்த நிலையில், அந்நாட்டு அதிபரோடு ஊஞ்சலில் அமர்ந்து பேசுபவன் நானல்ல என்று கூறியுள்ளார். அண்மையில் சீனாவில் அதிபர் ஜிங்பிங்குடன் மோடி ஊஞ்சலில் அமர்ந்து பேசிய படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். சீனத் தூதர் தன்னை சந்தித்தது குறித்து கவலைப்படும் மத்திய அரசு, இருநாடுகள் இடையே பதற்றம் நிலவும் சூழலில் மத்திய அமைச்சர்கள் மூன்று பேர் சீனாவுக்கு பயணம் சென்றதேன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே சீனா மற்றும் பூட்டான் நாடுகளின் தூதர்களை ராகுல்காந்தி சந்தித்தது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜே வாலா, நாட்டின் முக்கியத் தலைவர்களை பிறநாட்டுத் தூதுவர்கள் சந்திப்பது வழக்கமான ஒன்றுதான் என்று கூறியுள்ளார்.