மீனுக்காக வலைவிரித்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி : துள்ளிக்குதித்த மலைப்பாம்பு

மீனுக்காக வலைவிரித்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி : துள்ளிக்குதித்த மலைப்பாம்பு
மீனுக்காக வலைவிரித்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி : துள்ளிக்குதித்த மலைப்பாம்பு

ராஜபாளையத்தில் குளத்தில் மீன் வலையை வீசி காத்திருந்தவர்கள், 6 அடி மலைப்பாம்பு சிக்கியதால் அதிர்ச்சி அடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள முகவூரில் இருந்து சொக்கநாதன் புத்தூர் செல்லும் வழியில் தொண்டைமான் குளம் உள்ளது. இந்த குளத்தில் உள்ள மீன்களை பிடிப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த மக்கள் வலைவிரித்து வைத்திருந்தனர். இன்று காலை வலையின் ஒரு பகுதி அறுந்து இருப்பதைக் கண்ட மீன்பிடிப்பாளர், வலையை இழுத்துப்பார்த்தார். அப்போது வலைக்குள் சுமார் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சிக்கி இருந்தது. அதைக்கண்டதும் மீன்பிடிப்பாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பாம்பின் கீழ் பகுதி முழுவதும் வலையில் சிக்கி இருந்ததால், அது தப்பிக்க முடியாமல் வலையை அறுத்திருந்தது தெரியவந்தது. வலையை இழுத்து பாம்பை பிடித்த மக்கள், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை ஊழியர்களிடம் பாம்பை ஒப்படைத்தனர். வனத்துறையினர் மலைப்பாம்பை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விட்டனர்.

கடந்த மே மாதம் 30ம் தேதி, கடந்த ஜீன் 25ம் தேதி மற்றும் 30ம் தேதி என இந்த குளத்தில் மலைப்பாம்புகள் பிடிபட்ட நிலையில், தொடர்ச்சியாக இன்றும் 4வது முறையாக மற்றொரு மலைப்பாம்பு பிடிபட்டுள்ளது. இந்த குளத்தின் அருகே குடியிருப்புகள் அதிகம் உள்ளன. இருப்பினும் தொடர்ந்து மலைப்பாம்புகள் பிடிபடும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், பிடிக்கப்படும் மலைப் பாம்புகளுக்கெல்லாம் பெரிய தாய் பாம்பு இருக்கலாம் என்று அஞ்சுகின்றனர். இதனால் பொதுப்பணித்துறையினர் குளத்தை தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com