சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் சீசனின் 17வது லீக் ஆட்டத்தில் மும்பை இன்டியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. முதலில் பேட் செய்த மும்பை அணி இருபது ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களை குவித்தது. அதனால் 132 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய பஞ்சாப் அணி 14 பந்துகள் எஞ்சியிருக்க 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அந்த அணிக்காக கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் இன்னிங்ஸை தொடங்கியிருந்தனர். இருவரும் 53 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். மயங்க் 20 பந்துகளில் 25 ரன்களை குவித்து ராகுல் சாஹர் சுழலில் சிக்கி விக்கெட்டை இழந்தார். பின்னர் களத்திற்கு வந்த கெயில், ராகுலுடன் நிதானமாக விளையடினார். ரன் குவிப்பதை காட்டிலும் விக்கெட்டை இழக்க கூடாது என்பதில் இருவரும் தெளிவாக இருந்தனர். அதனால் முதலில் சில ஓவர்கள் தட்டி, தட்டி விளையாடினர். அதன் பலனாக 79 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 17வது ஓவரில் கே. எல். ராகுல் அரை சதம் கடந்தார்.
கெயில் தனது ஆட்டத்தை நிதானமாக தொடங்கி இருந்தாலும் அதற்கு பின்னர் அதிரடியாக விளையாடினார். 35 பந்துகளில் 43 ரன்களை குவித்தார் கெயில். இதில் ஐந்து பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் அடங்கும். இறுதியில் கெயில் அதிரடியால் பஞ்சாப் 17.4 ஓவர்களில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஹாட்ரிக் தோல்விக்கு விடை கொடுத்துள்ளது பஞ்சாப்.