"வழிபாட்டு தலங்கள் அரசால் நிர்வகிக்கப்படாது"- புதுச்சேரி பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

"வழிபாட்டு தலங்கள் அரசால் நிர்வகிக்கப்படாது"- புதுச்சேரி பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்
"வழிபாட்டு தலங்கள் அரசால் நிர்வகிக்கப்படாது"- புதுச்சேரி பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு நிர்வாகிகள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.

பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட சிறப்பம்சங்களில், புதுச்சேரியில் ஒருங்கிணைந்த மாபெரும் ஆடை உற்பத்தி தொழில்நுட்ப பூங்கா உருவாக்கப்படும், புதுச்சேரிக்கு தனி பள்ளிக்கல்வி தேர்வாணையம் உருவாக்கப்படும். 9 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு டேப்லெட் வழங்கப்படும், மழலையர் முதல் உயர்கல்வி வரை பெண்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, உயர்கல்வி பயிலும் மாணவிளுக்கு இலவச இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இனி எந்த ஆன்மீக வழிபாட்டு தலங்களும் அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படாது என்றும் மகாகவி சுப்பிரமணிய பாரதிக்கு 150 அடி உயர சிலை நிறுவப்படும், கொரோனா பேரிடர் காலத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் பெறப்பட்ட கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி என்றும் மகளிர் அனைவருக்கும் இலவச பொது போக்குவரத்து வசதி செய்து தரப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 50% பெண்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யப்படும் மற்றும் காவல்துறை பணியிடங்களில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும். அனைத்து மகளிருக்கும் இலவச மருத்துவ உதவிகள். 2.5 லட்சம் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு. நடமாடும் நியாயவிலைக் கடைகள் அமைக்கப்படும் என்றும் சென்னையுடன் புதுச்சேரி மற்றும் காரைக்கால் இணைப்பதற்காக கடல் வழி விமானம்  மற்றும் ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 24 மணி நேரமும் மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்படும், அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.2000 உதவித்தொகை பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும், மீனவர்களுக்கு நவீன வீடுகள் கட்டித்தரப்படும், மீன்பிடி கப்பல்களுக்கு ரூ.11 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் எனவும் அனைத்து மீனவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.6,000 வரை உதவித்தொகை வழங்கப்படும், மீன்பிடி தடைக்காலம் நிவாரணம் ரூ 5 ஆயிரம் முதல் ரூ. 8 ஆயிரம் வரை உயர்த்தப்படும் என்றும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மூடப்பட்ட நூற்பாலைகளும், பஞ்சாலைகள் மற்றும் கூட்டுறவு மில்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைவருக்கும் பிரதமரின் ஆயுள் காப்பீட்டு திட்டம் நிறைவேற்றப்படும் எனவும் 50 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முழு உடல் பரிசோதனை; மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதியம் ரூ.3000 முதல் ரூ. 5000 வரை உயர்த்தி வழங்கப்படும்; மூத்த குடிமக்களுக்கு ஆன்மீக சுற்றுலா திட்டம்; ஊனமுற்றவர் மாத ஓய்வூதியம் ரூ.1750 லிருந்து ரூ.4000 வரையும், விதவை ஓய்வூதியம் ரூ.2000 முதல் ரூ.3000 எனவும் உயர்த்தி வழங்கப்படும்.புதிய அரசு பணியாளர் தேர்வாணையம் ஏற்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அரசு சேவைகளை எளிதில் பெற Puducherry.gov.in வலைதளம் மற்றும் செயலி தொடங்கப்படும் என்றும் அனைத்து கல்வி மற்றும் வேலை வாய்ப்பு நடவடிக்கைகளிலும் பொருளாதார ரீதியான பலவீனமான பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில் நிர்மலா சீத்தாராமன் பேசியபோது, ''பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. எனக்கு அக்கட்சி வழங்கிய பல்வேறு பதவிகளை கொண்டே கட்சி எந்தளவிற்கு பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை உணரமுடிகின்றது. கடந்த பட்ஜெட்டில் விவசாயத்துறையில் 10 ஆயிரம் கோடி ஒதுக்காமல் சென்றதற்கு மேற்கு வங்க அரசு தான் காரணம் அதற்கு உரிய திட்ட அறிக்கையை அம்மாநில அரசு மத்திய அரசுக்கு சமர்பிக்கவில்லை. அதே போன்று புதுச்சேரி மாநிலத்திற்கான திட்ட அறிக்கையை காங்கிரஸ் அரசு தாக்கல் செய்யவில்லை. மேலும் பிரதமர் மோடிக்கு நல்ல பெயர் வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் மத்திய அரசின் திட்டங்களை நாராயணசாமி புதுச்சேரியில் செயல்படுத்தவில்லை” என குற்றஞ்சாட்டினார்.

பாஜக தேர்தல் அறிக்கை குறித்து பேசிய புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “புதுச்சேரியில் பாரதீய ஜனதா கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் புதுச்சேரி மாநில மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மாநில அந்தஸ்து, கடன் தள்ளுபடி இல்லை, அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு கொடுக்கும் முடிவை நிராகரித்தார்களே தவிர அதை தேர்தல் அறிக்கையில் ஏற்றுக்கொள்ள வில்லை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம், புதிய திட்டங்கள், புதிய நிதி ஆதரங்கள் என்று எதுவுமே இல்லாமல் நிதி அமைச்சரே வெறும் கையோடு போடப்பட்டுள்ள உப்பு சப்பு இல்லாத தேர்தல் அறிக்கை''  என கூறினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com