”பிரசவத்திற்கு கூட செல்ல முடியவில்லை” பாதையில்லாமல் அல்லல் படும் போடி மலைக்கிராம மக்கள்

”பிரசவத்திற்கு கூட செல்ல முடியவில்லை” பாதையில்லாமல் அல்லல் படும் போடி மலைக்கிராம மக்கள்
”பிரசவத்திற்கு கூட செல்ல முடியவில்லை” பாதையில்லாமல் அல்லல் படும் போடி மலைக்கிராம மக்கள்
Published on

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணியில் இருந்து 4 மலைக்கிராமங்களுக்கு செல்லும் பாதையில் ஜீப் மற்றும் தனியார் வாகனங்கள் செல்வதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளதால் பிரசவம் போன்ற அவசர காலங்களில் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் மலைக்கிராம மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள குரங்கணியில் இருந்து மலைக்கிராமமான முதுவாக்குடி, முட்டம், எட்டூர், வட்டவடை, சென்ட்ரல் ஸ்டேசன் போன்ற மலைக்கிராமங்களில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் தேன் எடுத்தல், மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களை பிரதானமாக செய்து வருகின்றனர். தற்பொழுது குரங்கணியில் இருந்து மலைகிராம பகுதிக்கு செல்லக்கூடிய பாதை வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் இங்கு சில தனி நபர்கள் இரவு நேரங்களில் மலைக்கிராம மக்கள் செல்லும் பாதையின் வழியாக ஜீப்கள் மூலம் சென்று மரங்களை வெட்டி கடத்துவதாக வந்த தகவலையடுத்து போடி வனத்துறையினர் அந்த பாதையின் வழியாக ஜீப் மற்றும் தனியார் வாகனங்கள் செல்ல தடைவிதித்துள்ளனர்.


இதனால் மலைக்கிராம மக்கள் வாகன வசதி இல்லாமல் சுமார் 14 கீமீ தூரம் கரடு, முரடான மலைப்பாதைகளில் நடந்து செல்கின்றனர். அவசர காலங்களில் வாகன வசதி இல்லாததால் கர்ப்பிணி பெண்கள் நோயாளிகள், மற்றும் இறந்தவர்களின் உடல்களை மலைகிராம மக்கள் டோலி கட்டி தூக்கி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து அப்பகுதி மலைவாழ் மக்கள் கூறுகையில் தங்கள் மலை கிராம பகுதிக்கு செல்ல போதிய சாலை வசதி இல்லாமல் பல ஆண்டுகளாக உள்ளதாகவும், இருப்பினும் தற்சமயம் உள்ள மண் பாதையை வனத்துறையினர் தடுப்பு கம்பிகளை கொண்டு பூட்டி வைத்துள்ளனர். இதனால் பிரசவம், மருத்துவம் போன்ற அவசர காலங்களில் வாகன வசதி இல்லாமல் சிரமப்பட்டு வருவதாகவும், அரிசி காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல வாகன வசதி இல்லாமல் ரேஷன் கடைகளில் கொடுக்கும் இலவச அரிசியை கூட 500 ரூபாய் கொடுத்து குதிரையில் கொண்டு செல்வதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.


எனவே வனத்துறையினர் தடுப்பு கம்பிகளை அகற்றி மலை கிராம மக்களுக்கு வாகன வசதி ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மண் பாதையையிம் மிகுந்த சேதமடைந்துள்ளதால் தார் சாலை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com