நேரு குடும்பத்தில் அல்லாதவர் தலைவரானால் கட்சி 24 மணி நேரத்தில் பிளவுபடும் - நட்வர் சிங்
நேரு குடும்பத்தில் அல்லாத ஒருவர் தலைவரானால் கட்சி 24 மணி நேரத்தில் பிளவுபடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் நட்வர் சிங் கூறியுள்ளார்.
மக்களவையில் ஏற்படுத்த படுதோல்வியை அடுத்து தன்னுடைய தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இருப்பினும், ராகுலே தலைவராக தொடர வேண்டுமென அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கூறினர். ஆனால், ராஜினாமா முடிவில் உறுதியுடன் இருப்பதாக, அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியை உடனடியாக செய்யுங்கள் என காரிய கமிட்டிக்கு ராகுல் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மூத்த தலைவர் நட்வர் சிங் கூறுகையில், “சோன்பத்ரா விவகாரத்தில் பிரியங்கா காந்தி செய்ததை பார்த்திருப்பீர்கள். அது மிகவும் அற்புதமானது. அவர் கிராமத்திலேயே தங்கி விரும்பியதை செய்துகாட்டிவிட்டார்.
நேரு குடும்பத்தில் இருந்து யாரும் தலைவராக வரமாட்டார்கள் என ராகுல் காந்தி தெரிவித்துவிட்டார். ஆனால், தலைவர் பதவிக்கு தகுதியானவர் பிரியங்கா காந்திதான் என்று இந்த சம்பவம் காட்டியுள்ளது. மற்றவர்கள் தலைவராக வந்தால் 24 மணி நேரத்தில் கட்சி பிளவுப்படும்” என்றார்.

