தேர்தலையொட்டி தனியார் பேருந்து கட்டணம் அதிகரிப்பு
மக்களவை தேர்தலையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க உள்ள நிலையில் பெரும்பாலான தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தலில் வாக்கு அளிப்பதன் அவசியம் குறித்தும், 100% வாக்குப்பதிவிற்காகவும் மக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு மேற்கொள்ளபடுகிறது. இதனால் ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் வாக்களிக்க பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். மேலும் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 18ஆம் தேதி அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி விடுமுறை எடுத்தால் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை தினமாக இருக்கும். இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் வாக்களிக்க லட்சக்கணக்கான மக்கள் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்தும் சில தனியார் பேருந்து நிறுவனங்கள், பயணிகளிடம் 70 சதவிகித கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனிடையே பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகமும் திட்டமிட்டுள்ளது. ஆனால் எத்தனை பேருந்துகள் இயக்கப்படும் என்பது குறித்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.