தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பரப்புரைக்காக மதுரை வந்த பிரதமர் மோடி மக்கள் மத்தியில் பேசினார்.
அவர் பேசும்போது, “வெற்றி வெற்றி வெற்றி வேல்... வீர வீர வீர வேல்... ‘நல்லா இருக்கீங்களா? எனக்கு மதுரை வந்ததில் மிக்க மகிழ்ச்சி. தமிழ் பண்பாட்டின் முக்கிய மையமாக மதுரை திகழ்கிறது. தமிழ் மொழிக்கும் மதுரைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. புண்ணிய பூமியாகவும், வீர பூமியாகவும் மதுரை திகழ்கிறது. இந்த மண் மகாத்மா காந்திக்கு மிக தாக்கத்தை ஏற்படுத்தியது.
நேற்று மீனாட்சி சுந்தரேஷ்வரர் ஆலயத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அது எனது நினைவில் என்றும் இருக்கும். செளராஷ்டிரா மக்களை மதுரை ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஒற்றுமையின் அடையாளமாக மதுரை இருக்கிறது. இளைஞர்கள் வேலைகளை உருவாக்குபவர்களாக இருக்க வேண்டும்.
ரூ 100 லட்சம் கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்
மதுரை - கொல்லம் போக்குவரத்து வழித்தடம் மேம்பட உள்ளது. உள்கட்டமைப்பு மேம்பட்டால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயரும். 130 கோடி மக்களின் வாழ்வாதாம் மேம்பட மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்தால் இங்கு அனைத்து வசதிகளும் மேம்படும்.” என்றார்.
மேலும் பேசிய அவர், “ மதுரையில் மிக விரைவில் சர்வதேச தரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும். எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்திற்கு கொண்டு வரவேண்டும் என நினைத்தது பாஜக; திமுக- காங்கிரஸ் அல்ல. திமுக காங்கிரஸார் தங்களை பாதுகாவலர்கள்போல் சித்தரித்துக்கொள்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல”என்றார்.