பிரசவத்திற்கு தனியார் கிளினிக்கில் செலவு அதிகம்... அரசு மருத்துவமனையை நாடும் கர்ப்பிணிகள்
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அதிக அளவில் கர்ப்பிணி பெண்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அதேபோன்று அதிகப்படியான ஏழை எளிய நடுத்தர பெண்கள் விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பிரசவத்திற்காக இந்த மருத்துவமனைக்கு அதிக அளவில் வருகின்றனர்.
தற்போது கொரோனா காலமென்பதால் ஊரடங்கு உத்தரவால் பல்வேறு மருத்துவமனைகளில் கட்டுப்பாடுகள் உள்ளன. இதனையடுத்து கொரோனா பரிசோதனைக்கு அதிக கட்டணம் என்பதால் கடந்த ஏப்ரல் மே ஜூன் ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் ஆகிய ஆறு மாதங்களில் 6179 பிரசவங்கள் நடைபெற்றுள்ளது.
இதில் 257 கர்ப்பிணி பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2975 கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் நடைபெற்றுள்ளது. கொரோனாவுக்கு முன்பு அக்டோபர் நவம்பர் டிசம்பர் ஜனவரி பிப்ரவரி மார்ச் ஆகிய ஆறு மாதத்தில் 5042 பிரசவங்கள் நடைபெற்றுள்ளது. கொரோனா காலத்தில் அதிகப்படியாக 1137 பிரசவங்கள் கூடுதலாக இந்த மருத்துவமனையில் நடந்துள்ளது.
கொரோனா காலம் என்பதால் பிரசவத்திற்கு தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூல் செய்வதாலும் பிரசவத்திற்கு அனுமதிக்க மறுப்பதாலும் கர்ப்பிணி தாய்மார்கள் அதிக அளவில் அரசு மருத்துவமனையை நாடி உள்ளனர் என மருத்துவ வட்டாரம் தெரிவிக்கின்றது.