“உள்ளூர் மக்களை கவனிக்காதவர் மோடி” - பிரியங்கா குற்றச்சாட்டு
பிரதமர் மோடி உலகத் தலைவர்களை ஈர்ப்பதில் காட்டிய கவனத்தை தனது சொந்த தொகுதி மக்களின் நலனில் காட்டவில்லை என்று பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பேசுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மோடியின் வாரணாசி தொகுதியில் பல கிராமங்களுக்கு சென்றதாக குறிப்பிட்ட பிரியங்கா, அங்குள்ள மக்கள் தங்கள் கிராமத்துக்கு மோடி வரவில்லை என்று குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார். பல்வேறு நாடுகளுக்கு சென்று அந்நாட்டு தலைவர்களை கட்டியணைத்து மகிழும் மோடி, தன்னை தேர்ந்தெடுத்த தொகுதி மக்களைச் சென்று பார்க்கவில்லை என்றும் பிரியங்கா குற்றம்சாட்டினார்.
அயோத்தியில் தெருமுனைக் கூட்டங்களில் பேசிய பிரியங்கா, காங்கிரஸ் அறிவித்துள்ள குறைந்தபட்ச வருவாய் திட்டத்திற்கு அரசிடம் பணம் இருக்காது என மோடி கூறுவதாகவும் ஆனால், தொழிலதிபர்களுக்கு தருவதற்கு மட்டும் பணம் எங்கிருந்து வருகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.
முன்னதாக ரேபரேலியில் தொண்டர்களிடம் பேசிய பிரியங்கா, வாரணாசி தொகுதியில் போட்டியிட வேண்டுமா எனக் கேள்வி எழுப்பினார். வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட பிரியங்கா திட்டமிட்டுள்ளாரா என்ற யூகத்தை இந்தக் கேள்வி எழுப்பியுள்ளது.