ஜம்மு-காஷ்மீர் சட்டசபை கலைப்பு - ஆளுநர் சத்யபால் அதிரடி

ஜம்மு-காஷ்மீர் சட்டசபை கலைப்பு - ஆளுநர் சத்யபால் அதிரடி
ஜம்மு-காஷ்மீர் சட்டசபை கலைப்பு - ஆளுநர் சத்யபால் அதிரடி

ஜம்மு-காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹபூபா முஃப்தி ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பாஜக இணைந்து ஆட்சி அமைத்தது. முஃப்தி முகமது சையது முதலமைச்சராகவும், நிர்மல் குமார் துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்றனர். முஃப்தி முகமது உடல் நலக் குறைவால் உயிரிழந்ததை அடுத்து அவரது மகள் மெஹபூபா முஃப்தி முதலமைச்சராக 2016, ஏப்ரல் மாதம் பொறுப்பேற்றார். இதனையடுத்து, பிடிபி, பாஜக இடையே தொடர்ச்சியாக கருத்து வேறுபாடு நிலவி வந்தது. 

அதனையடுத்து, இந்த ஆண்டு ஜூன் மாதம் பாஜக தனது ஆதரவை விலக்கி கொள்வதாக அறிவித்ததால், ஜம்மு காஷ்மீரில் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது. மெஹபூபாவின் அரசும் கவிழ்ந்தது. பின்னர், யாரும் ஆட்சி அமைக்க முன்வராததால் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், காஷ்மீர் சட்டசபை கலைக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் சத்ய பால் மாலிக்கிற்கு மெஹபூபா கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாடு கட்சிகள் எங்களுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக ஊடகங்கள் மூலம் நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள் என அந்த கடிதத்தில் மெஹபூபா குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக, காங்கிரஸ், மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாடு கட்சிகளிடையே புதிய அரசு அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி இருந்தது. அதனை, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மற்றும் பிடிபி தலைவர் ஒருவர் உறுது செய்திருந்தார்.

டிசம்பர் 19 ஆம் தேதி உடன் ஆளுநரின் 6 மாத கால ஆட்சி முடிவடைய உள்ள நிலையில், மெஹபூபா மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். மெஹபூபா ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிலையில், காஷ்மீர் சட்டசபையை ஆளுநர் சத்ய பால் மாலிக் கலைக்க உத்தரவிட்டுள்ளார்.

இதனால், எந்த கட்சியும் கூட்டணி சேர்ந்து இனி ஆட்சி அமைக்க முடியாது. இதனால், ஜம்மு-காஷ்மீரில் இனி தேர்தல் வரவுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com