இன்றைய அரசியலில் மாற்றம் வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜனசேனா நடத்திய பிரம்மாண்ட அரசியல் விழிப்புணர்வு நடைபயணத்தில் லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
நடிகரும், ஜனசேனா என்ற அமைப்பின் தலைவருமான பவன் கல்யாண், இன்றைய அரசியல் குறித்து இளைய தலைமுறையினர் உரிய விழிப்புணர்வு பெறவேண்டும் என்ற நோக்கத்தில் லட்சக்கணக்கானவர்கள் பங்குபெறும் பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ள காட்டன் பரேஜ் என்ற பாலத்தின் வழியாக இந்தப் பேரணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் தங்களின் கைகளை உயர்த்தியபடி, அரசியல் விழிப்புணர்விற்கான கோஷங்களை எழுப்பினர். அத்துடன் அணிவகுப்பில் இடம்பெற்றிருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஜனசேனாவின் தலைவரான பவன் கல்யாணை வரவேற்றனர்.
லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட இந்தப் பேரணியால் பவன் கல்யாண் மேடைக்கு செல்ல மூன்று மணி நேரம் ஆனது. அப்போது ஏராளமானவர்கள் பவன் கல்யாணைப் பார்த்து ‘வருங்கால முதல்வர் வாழ்க!’ என கோஷத்தை எழுப்பினர். அவர்களை பார்த்து கைவிரல்களை மடக்கி, உயர்த்தி ‘வெல்வோம், மாற்றத்தைக் கொண்டு வருவோம்.’ என்று சைகையும் காட்டினார் பவன்கல்யாண்.
இந்தப் பிரம்மாண்ட பேரணிக்கு இடதுசாரி மற்றும் தலித் அமைப்புகளும் தங்களது ஆதரவை தெரிவித்தன. அவர்கள் சிவப்பு மற்றும் நீல வண்ணக் கொடிகளை ஏந்தி தங்களது ஆதரவை வெளிப்படுத்தி, இந்த அரசியல் விழிப்புணர்வை வரவேற்றனர்.
இந்தப் பிரம்மாண்ட பேரணியில் கலந்து கொண்டவர்கள் கிழக்கு கோதாவரி மாவட்டத்து பெண்கள் தங்களுக்கே உரிய பாரம்பரிய முறையில் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.