நிறைவடைந்த குளிர்கால கூட்டத்தொடர்.. நிறைவேறாத முத்தலாக் மசோதா!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு பெற்றுள்ள நிலையில், முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறாமல் நிலுவையில் உள்ளது.
‘முத்தலாக்’ பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, ‘முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு மசோதா’வை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்துள்ளது. மசோதா கொண்டு வந்தது முதலே சர்ச்சை வெடித்தது. இந்த மசோதாவின்படி, ஒரே நேரத்தில் மூன்றுமுறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் கணவர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய முடியும். 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்க முடியும்.
விவாகரத்து என்பது சிவில் பிரிவில் வருகிறது. அதனால் அதனை கிரிமினல் குற்றத்தில் ஏன் கொண்டுவர வேண்டும் என்று கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதேபோல், கணவர் மூன்று ஆண்டுகள் சிறைக்கு செல்லும்பட்சத்தில் மனைவி மற்றும் குழந்தைகளின் நிலை கேள்விக்குறியாகிவிடும் என்று என்று பலர் விமர்சித்தனர். பாஜக தனது வகுப்புவாத கொள்கையை திணிக்க முயற்சிப்பதாக இஸ்லாமிய அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் சாடின. சாதாரணமாக புகார் அளித்தாலே உடனடியாக கைது செய்யப்பட வாய்ப்புள்ளதால், இந்த சட்டத்தைப் இஸ்லாமியர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது, காங்கிரஸ் கட்சி சில திருத்தங்களை கொண்டு வந்தது. ஆனால், அவற்றின் மீது ஓட்டெடுப்பு நடத்த வற்புறுத்தவில்லை. கடும் அமளி ஏற்பட்ட போதும், எதிர்க்கட்சிகளின் திருத்தங்களை புறக்கணித்து குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் பாஜக அரசுக்கு அதிக எம்.பி.க்கள் இருப்பதால் எதிர்க்கட்சிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
முத்தலாக் மசோதாவை மக்களவையில் நிறைவேற்றிய அரசு, மாநிலங்களவையில் போதிய பலம் இல்லாததால், நிறைவேற்றுவதில் சிக்கல் நீடித்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்வு குழுவுக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டன. இதனால் கடந்த இரண்டு நாட்களாக மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.
பாஜக எம்.பி.க்களுக்கும், எதிர்கட்சி எம்.பி.களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மாநிலங்களவை இரண்டு நாட்களாக கொந்தளிப்பாகவே காணப்பட்டது. காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் குலாம்நபி ஆசாத், கபில் சிபில் உள்ளிட்டோரும் கடுமையாக எதிர்ப்பை பதிவு செய்தனர். திரிணாமூல் எம்.பி. ஓ பிரையன் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ரானியுடன் நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
கடைசி நாளான இன்றும் முத்தலாக் மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றிவிட அரசு தீவிரம் காட்டியது. இன்றும் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாநிலங்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் முத்தலாக் மசோதா தாமாகவே மசோதா பிப்ரவரி மாதம் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு மாறியது. பாஜக அரசின் காங்கிரஸ், அதிமுக எம்.பி.க்களை சமரசம் செய்யும் முயற்சி தோல்வி அடைந்தது.
முத்தலாக் மசோதா விவகாரத்தில் பாஜகவின் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம், பாஜகவுடன் நட்பு பாராட்டி வரும் அதிமுக, பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு அக்கட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. மாநிலங்களவை தேர்வுக்கு குழுவுக்கு மசோதாவை அனுப்ப வேண்டும் என்பதில் கடைசி வரை உறுதியாக இந்த கட்சிகள் இருந்தன. இவ்வளவு எதிர்ப்புகள் இருந்தும் பாஜக தனது பிடிவாதத்தை விட்டுக் கொடுக்கவில்லை. பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் பிடிவாதம் அடுத்த கூட்டத்தொடர் வரை தொடருமானால் அப்போதும் மசோதா நிறைவேறுவது சந்தேகமே.