மாநிலங்களவையில் நிறைவேறாத முத்தலாக் மசோதா!

மாநிலங்களவையில் நிறைவேறாத முத்தலாக் மசோதா!

மாநிலங்களவையில் நிறைவேறாத முத்தலாக் மசோதா!
Published on

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு பெற்றுள்ள நிலையில், முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறாமல் நிலுவையில் உள்ளது.

‘முத்தலாக்’ பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, ‘முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு மசோதா’வை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. மசோதா கொண்டு வந்தது முதலே சர்ச்சை வெடித்தது. இந்த மசோதாவின்படி, ஒரே நேரத்தில் மூன்றுமுறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் கணவர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய முடியும். 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்க முடியும். விவாகரத்து என்பது சிவில் பிரிவில் வருகிறது. இதனால் அதனை கிரிமினல் குற்றத்தில் ஏன் கொண்டுவர வேண்டும் என்று கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதேபோல், கணவர் மூன்று ஆண்டுகள் சிறைக்கு செல்லும் பட்சத்தில் மனைவி மற்றும் குழந்தைகளின் நிலை கேள்விக்குறியாகிவிடும் என்றும் பலர் விமர்சித்தனர். பாஜக தனது வகுப்புவாத கொள்கையை திணிக்க முயற்சிப்பதாக இஸ்லாமிய அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் சாடின. சாதாரணமாக புகார் அளித்தாலே உடனடியாக கைது செய்யப்பட வாய்ப்புள்ளதால், இந்தச் சட்டத்தைப் இஸ்லாமியர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது, காங்கிரஸ் கட்சி சில திருத்தங்களை கொண்டு வந்தது. ஆனால், அவற்றின் மீது ஓட்டெடுப்பு நடத்த வற்புறுத்தவில்லை. கடும் அமளி ஏற்பட்ட போதும், எதிர்க்கட்சிகளின் திருத்தங்களை புறக்கணித்து குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் பாஜக அரசுக்கு அதிக எம்.பி.க்கள் இருப்பதால் எதிர்க்கட்சிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. முத்தலாக் மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றிவிட அரசு தீவிரம் காட்டியது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, நடைபெற்று வந்த மழைக்கால கூட்டத்தொடரில் மசோதா மாநிலங்களவையில் தாக்கலாகவில்லை. இன்றுடன் மழைக்கால கூட்டத்தொடர் முடிவதால் இந்த மசோதாவை இனிமேல் அடுத்ததாக வர உள்ள குளிர்கால கூட்டத்தொடரில்தான் தாக்கல் செய்ய முடியும்.  

இந்நிலையில் நேற்றைய தினம் மத்திய அமைச்சரவை முத்தலாக் மசோதாவில் திருத்தங்களை கொண்டு வருவதற்கு ஒப்புதல் அளித்திருந்தது. இந்தத் திட்டங்களுக்காக இன்று தாக்கல் செய்யப்பட்டிருந்த மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு குழுவுக்கு அனுப்ப வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின.  மாநிலங்களவையில் இந்த மசோதாவை தாக்கல் செய்வதில் சிக்கல்கள் இருந்த சூழலில்,  மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று இந்த மசோதா தாக்கல் செய்யப்படாது என அறிவித்தார். காங்கிரஸ்,  திரிணாமுல் காங்கிரஸ்,  சமாஜ்வாடி கட்சி,  பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் முத்தலாக் தடுப்பு சட்டத்தில்  திருத்தங்களை கொண்டு வரும் இந்தப் புதிய மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் மாநிலங்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் முத்தலாக் மசோதா தாமாகவே டிசம்பர் மாதம் நடைபெறும் குளிர்கால கூட்டத்தொடருக்கு மாறியது. பாஜக அரசு காங்கிரஸை சமரசம் செய்யும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com