“பாகுபாடின்றி செயல்பட தேர்தல் ஆணையம் தவறிவிட்டது” : ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
தேர்தல் நடத்தை விதிகளை மீறிய பிரதமர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தேர்தல் ஆணையம் தயங்குகிறது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களவை தேர்தல் கடந்த 11ஆம் தேதி தொடங்கிய நிலையில் இதுவரை 302 தொகுதிகளில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. நான்காம் கட்ட மக்களவை தேர்தலுக்கான பரப்புரையும் இன்று முடிவுக்கு வந்தது. 9 மாநிலங்களில் உள்ள 71 தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி பங்குபெறும் ஒவ்வொரு தேர்தல் பரப்புரைக்கும் 10 கோடி ரூபாய் வரை செலவிடப்படுகிறது, ஆனால் தேர்தல் ஆணையம் அதை கண்டுகொள்ளவில்லை என்று தெரிவித்தார். மேலும் பாகுபாடு இல்லாமல் செயல்படுவதில் தேர்தல் ஆணையம் தவறிவிட்டது என்றும், தேர்தல் நடத்தை விதிகளை மீறிய பிரதமர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தயங்கி வருகிறது என்றும் ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார்.