பாஜக அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு: நாடாளுமன்றத்தில் கடும் அமளி

பாஜக அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு: நாடாளுமன்றத்தில் கடும் அமளி
பாஜக அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு: நாடாளுமன்றத்தில் கடும் அமளி

மதச்சார்பின்மை குறித்த மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் ஹெக்டேவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் பிராமணர் இளைஞர் சங்க நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் ஹெக்டே அரசியலமைப்பு சட்டத்தில் இருந்து மதச்சார்பின்மை என்ற வார்த்தையை நீக்குவோம் என்று கூறினார். மேலும், “ஒரு முஸ்லிம் தன்னை முஸ்லிம் என்றோ, ஒரு கிருஸ்துவர் தன்னை கிருஸ்துவர் என்றோ, ஒரு பிராமணர் தன்னை பிராமணர் என்றோ, ஒரு லிங்காயத் தன்னை ஒரு லிங்காயத் என்றோ பெருமையாக கூறிக்கொள்வாரே ஆனால் எனக்கு மகிழ்ச்சி. ஏனென்றால் அவர்களில் ரத்தம் என்ன என்பது அவர்களுக்கு தெரியும். ஆனால் மதச்சார்பற்றவர்கள் என்று சொல்பவர்களை எப்படி அழைப்பது என்று சொல்ல தெரியவில்லை. என்ன ரத்தம் என்று தெரியாமல் தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று கூறிக்கொள்பவர்களுக்கு சொந்த அடையாளம் கிடையாது. அவர்களுக்கு தங்கள் பெற்றோர் யார் என்று தெரியாது. மக்கள் தங்களின் ஜாதி-மத அடையாளத்தைக் கண்டுகொள்ள வேண்டும். நீங்கள் யார் என்று சொன்னால் அதற்கு நான் தலைவணங்குகிறேன்” என்று பேசினார். ஹெக்டேவின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு குறித்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. ஹெக்டேவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவருக்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பினர். எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபடுவதை கண்டு ஹெக்டே மாநிலங்களவையில் இருந்து வெளியேறினார்.

அமைச்சர் ஹெக்டே உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் வலியுறுத்தினார். மேலும் அரசியலமைப்பு சட்டத்தில் நம்பிக்கை இல்லை என்றால் அமைச்சராகவும், நாடாளுமன்ற எம்.பி. ஆகவும் இருக்க அவருக்கு உரிமை இல்லை என்று ஆசாத் கூறினார். இடையில் பேசிய மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, இந்த சர்ச்சையில் அம்பேத்கரை நுழைக்க வேண்டாம் என்று வலியுறுத்தினார். நோட்டீஸ் அளித்தால்தான் எந்தவொரு விவகாரத்தையும் அவையில் பேச முடியும் என்றார்.

மக்களவையிலும் இந்த சர்ச்சையால் அமளி நிலவியது. மக்களவை அலுவல்களை ஒத்திவைத்து விட்டு மந்திரியின் பேச்சு குறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியது. அவை தொடங்கியதுமே இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.க்கள் கூச்சல் எழுப்பினர். இதனால், வழக்கமான அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com