''பாஜகவால் மட்டுமே நிலையான ஆட்சியைத்தர முடியும்'' : மோடி திட்டவட்டம்
உத்தரப்பிரதேச தேர்தல் பரப்புரையின் போது பேசிய பிரதமர் மோடி பாரதிய ஜனதா கட்சியால் மட்டுமே நிலையான ஆட்சியைத்தர முடியும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கர் பகுதியில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தனது அந்தஸ்தை குறைத்துக் கொண்டது என்றும் விரைவில் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி தொடங்கும் என்றும் தெரிவித்தார். ராகுலை இனியும் விமர்சித்து தாம் பேசப் போவதில்லை ஏனெனில் அழிவை அவரே தேடிக் கொண்டார் என்றும் ராகுல் காந்தியை பிரதமர் மோடி சாடினார்.
மேலும் எதிர்க்கட்சிகள் அமைத்திருக்கும் மகா கூட்டணியால், மகா ஊழல் தான் விளையும் என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம் செய்தார். கடந்த காலங்களில் மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை காங்கிரஸ் விலக்கிக் கொண்டதால், அரசியல் ஸ்திரத்தன்மை கேள்விக் குறியானது என குற்றம்சாட்டிய பிரதமர் மோடி, மத்தியில் பாரதிய ஜனதா கட்சியால் மட்டுமே நிலையான ஆட்சியை தர முடியும் என்றும் கூறினார்.