திருப்பூரில் துக்க வீட்டில் நடந்த தகராறில் ஒருவர் உயிரிழப்பு... 3பேரிடம் போலீசார் விசாரணை
திருப்பூரில் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இரு பிரிவினருக்கு இடையே நடைபெற்ற தகராறில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 3 பேரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திருப்பூர் புதுக்காடு பகுதியில், நடந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க, கார்த்திக்ராஜா மற்றும் அவரது நண்பர்களும், அழகுராஜா மற்றும் அவரது நண்பர்களும் சென்றுள்ளனர். இந்நிலையில் இறந்தவரின் உடலுக்கு மலர்வளையம் வைப்பதில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் காயமடைந்த அழகுராஜா அளித்த புகாரின் பேரில், கார்த்திக்ராஜா மற்றும் அவரது நண்பர்கள் மீது திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் பல்லடத்திலுள்ள மாமியார் வீட்டுக்கு சென்ற கார்த்திக் ராஜா, படுத்து தூங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார். பரிசோதனையில் கார்த்திக் ராஜாவின் உச்சந்தலையில் பலத்த காயம் இருந்ததாகவும், சிகிச்சை எடுக்காத காரணத்தால் தலைக்குள் ரத்தக்கசிவு ஏற்பட்டு இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கொலை வழக்குப்பதிவு செய்த திருப்பூர் தெற்கு போலீசார் அழகுராஜா, சக்திவேல், சல்மான்கான் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.