ஆந்திராவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி ஒரே ஒரு தொகுதியை மட்டுமே கைப்பற்றியிருக்கிறது.
ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து அந்தக் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சர் ஆகிறார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 151 தொகுதிகளிலும் தெலுங்கு தேசம் கட்சி 23 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தத் தேர்தலில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கட்சி, ஜனசேனா. ஆந்திர அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தக் கட்சியின் தலைவர் நடிகர் பவன் கல்யாண், நடிகர் சிரஞ்சீவியின் தம்பி.
சிரஞ்சீவி, பிரஜா ராஜ்யம் கட்சியை ஆரம்பித்து 2009 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டபோது, 18 இடங்களில் வெற்றி பெற்றார். பின்னர் அவர் தனது கட்சியை காங்கிரஸூடன் இணைத்துக்கொண்டார். இதே போல ஜனசேனா கட்சி, குறைந்தது 30 இடங்களையாவது கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டது. அதற்கு கப்பு சமூதாய வாக்குகளும் பிற்படுத்தப்பட்டோரின் வாக்குகளும் அந்தக் கட்சிக்கு கிடைக்கும் என்று கூறப் பட்டது. ஆனால், அந்த கணிப்புகளை பொய்யாக்கி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது.
ஜனசேனா கட்சிக்கு ஒரே ஒரு தொகுதி மட்டுமே கிடைத்துள்ளது. இந்தக் கட்சியின் தலைவர் நடிகர் பவன் கல்யாண், குஜ்ஜூவாடா, பீமாவரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டும் தோல்வி அடைந்தார்.
ஜனசேனா கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தோல்வி பற்றி கூறும்போது, ’’வாக்குகளை பிரிப்பதில் ஜனசேனா தோல்வியடைந்துவிட்டது. எதிர்ப்பாத்த சமுதாய வாக்குகளையும் இழந்துவிட்டது. சந்திரபாபு நாயுடுவுக்கு எதிரான அலையில், தங்கள் கட்சி அதிக வாக்குகளைப் பெற முடியாமல் போய்விட்டது’’ என்பதை ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், தேர்தல் தோல்வி குறித்து பவன் கல்யாண் கூறும்போது, ‘’புதிய அலை அரசியல் என்ற கருத்துடன் மக்களுக்கு சேவை செய்ய வந்தேன். என் அரசியல் பயணம் அதே தடத்தில் மீண்டும் தொடரும்’’ என்றார்.