‘16 வயது சிறுமிக்கும் 27 வயது இளைஞருக்கும் திருமணம்’ கடைசி நேரத்தில் நிறுத்திய அதிகாரிகள்
வேலூர் மாவட்டத்தில் மேலும் ஒரு குழந்தை திருமணத்தை சமூக நலத்துறையினர் தடுத்து நிறுத்தினர். இந்த வாரத்தில் மட்டும் 12 குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தி சமூக நலத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் வேலையில் வேலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் நடப்பதும் அதிகரித்துள்ளது. ஊரடங்கில் வெளியில் தெரியாது என்பதால் இது போன்ற குழந்தை திருமணங்கள் அதிகம் நடப்பதாக சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் இன்றும் வேலூர் சேண்பாக்கம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், ஆரணியை சேர்ந்த 27 வயது இளைஞருக்கும் நடைபெற இருந்த குழந்தை திருமணம் ரகசிய தகவலின் படி சமூக நலத்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சிறுமியின் வீட்டில் நடைபெற இருந்த திருமணத்தை கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்திய சமூக நலத்துறை அதிகாரிகள் சிறுமியை மீட்டு வேலூரில் உள்ள அரசு உதவிபெறும் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
அங்கு அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதுவரை வேலூர் மாவட்டத்தில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இது ஒருங்கிணைந்த வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தை பொறுத்த வரை 73 ஆக உள்ளது. கடந்த வாரம் மட்டும் 12குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

