வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற அதிகாரிகள் ஆய்வு
ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் அவரது நினைவிடமாக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவது தொடர்பாக அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
ஆய்வு நடத்துவதற்காக சென்னை ஆட்சியர், வட்டாட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் வேதா இல்லம் வந்துள்ளனர். வேதா இல்லத்தின் மதிப்புகளை அளவிடும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். போயஸ் கார்டனில் உள்ள சசிகலாவின் 2 அறைகளை ஏற்கனவே வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்திருந்த நிலையில் தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னிலையில்தான் ஆய்வு நடந்து வருகிறது. வேதா இல்லத்தை விரைவில் அரசுடைமையாக்கும் பொருட்டு தற்போது ஆய்வு நடந்து வருகிறது. அதிகாரிகள் ஆய்வையொட்டி வேதா இல்லம் அருகே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

