\
ஒகி புயல் நிவாரணம் ரூ.10 லட்சமாக உயர்வு

ஒகி புயல் நிவாரணம் ரூ.10 லட்சமாக உயர்வு

ஒகி புயல் நிவாரணம் ரூ.10 லட்சமாக உயர்வு
Published on

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலால் உயிரிழந்த மீனவர் அல்லாதவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரணத்தை ரூ.10 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

வங்கக்கடல் பகுதியில் உருவான ‘ஒகி’ புயல் காரணமாக, கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. அந்த நேரத்தில் ஏகப்பட்ட மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதில் சிக்கி பலர் உயிரிழந்தனர். மேலும் ஒகி புயல் நேரத்தில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் மாயமாகினர். அவர்கள் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்படவிலலை. மீனவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாயமான மீனவர்களை விரைந்து மீட்கக்கோரி கன்னியாகுமரியில்  போராட்டமும் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் ஒகி புயலால் உயிரிழந்த மீனவர் அல்லாதவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரணத்தை ரூ.10 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஒகி புயலால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒகி புயலால் உயிரிழந்த மீனவர் அல்லாதவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அது தற்போது ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து இந்த நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com