தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட 4500க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக கடந்த மார்ச் 12 ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வந்தது. இந்நிலையில், தமிழக சட்டபேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. தேர்தல் ஆணையம் சற்றுமுன் வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் போட்டியிட இதுவரை 3,818 ஆண்கள், 747 பெண்கள் மற்றும் 2 மூன்றாம் பாலினத்தவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு பரிசீலனை நாளை நடைபெறவுள்ளது.
மனுதாக்கல் செய்யும் கடைசிநாளான இன்று சுயேச்சையாக போட்டியிட அதிகமானோர் மனுதாக்கல் செய்துள்ளனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 70 பேரும், மேட்டூர் தொகுதியில் 62 பேரும் மனுதாக்கல் செய்துள்ளனர். குறைந்தபட்சமாக விளவங்கோடு தொகுதியில் 6 வேட்புமனுக்கள் தாக்கலாகியுள்ளன. கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தல் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலும் நிறைவடைந்தது.