வேலூர் மக்களவைத் தேர்தல் ரத்து தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வீட்டில் கடந்த மாதம் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின்போது முக்கிய ஆவணங்களும், 10 லட்ச ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு இம்மாதம் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையின் போது துரைமுருகனுக்கு நெருங்கிய நண்பரும் திமுக பகுதி செயலாளருமான பூஞ்சோலை சீனிவாசனின் சகோதரி வீட்டிலிருந்து 11 கோடியே 48 லட்ச ரூபாய் பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்ததாக பூஞ்சோலை சீனிவாசன், வருமான வரித்துறையினரிடம் கூறியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதால் வேலூரில் தேர்தல் ரத்து செய்யப் படுமா என்ற கேள்வி எழுந்தது.
அதைத் தொடர்ந்து காட்பாடி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர், ஆய்வாளர் புகழ் ஆகியோர் வழக்குப் பதிவு செய்வது குறித்து நீதிபதி உடன் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து கதிர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் திமுக பகுதி செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன், அவரது சகோதரியின் கணவர் தமோதரன் ஆகியோர் மீது தலா இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில், வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் நடத்த தடை விதிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக மீடியாவில் தகவல் வெளியானது. ஆனால், வேலூர் மக்களவைத் தேர்தலை நிறுத்துவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைய செய்தி தொடர்பாளர் ஷேய்பாலி ஷரண் இதைத் தெரிவித்தார்.