அதிமுகவை மோடி வந்தாலும் அவரது டாடி வந்தாலும் காப்பாற்ற முடியாது - டிடிவி தினகரன்
18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், அதிமுக 8 இடங்களில் வெற்றிபெறாவிட்டால் தமிழகத்தில் இப்போது உள்ள ஆட்சியை பிரதமர் மோடி அல்ல அவரது டாடி வந்தாலும் காப்பாற்ற முடியாது என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி தொகுதி அமமுக வேட்பாளர் முத்துக்குமாரை ஆதரித்து அக்கட்சியின் துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உடுமலை பேருந்துநிலையம் முன்பு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய டிடிவி தினகரன், “ பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை ஜெயலலிதா இருந்திருந்தால் இந்நேரம் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்திருப்பார். ஆனால் இப்போது இவ்வழக்கில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் தலையீடு உள்ளதால் காவல்துறையினர் மூடி மறைக்கப் பார்க்கின்றனர். தமிழகமே அதிர்ச்சியில் உறைந்த இந்த சம்பவத்தை பற்றி முதல்-அமைச்சர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
கொங்குமண்டலத்தை சார்ந்தவர்கள் என கூறிக் கொண்டு உயர்மின் கோபுரம் அமைக்க முயற்சிக்கின்றனர். இதுகுறித்து அமைச்சர் தங்கமணியிடம் விவசாயிகள் கேட்டபோது மத்திய அரசின் திட்டம் எங்களால் ஒன்று செய்யமுடியாது என கூறுகிறார். 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் , அதிமுக 8 இடங்களில் வெற்றிபெறாவிட்டால், தமிழகத்தில் இப்போது உள்ள ஆட்சியை பிரதமர் மோடி அல்ல அவரது டாடி வந்தாலும் காப்பாற்ற முடியாது” என தெரிவித்தார்.